அசானி புயல் எதிரொலி: சென்னையில் 10 விமான சேவைகள் ரத்து!

சென்னை: அசானி புயல் காரணமாக சென்னையில் காற்றும் பல இடங்களில் மழையும் பெய்து வருகிறது. மேலும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக சென்னையில்  10 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளதாக விமான நிலைய இயக்குனரகம் அறிவித்து உள்ளது.

வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள அசானி புயல் ஆந்திராவின் காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கில் 330 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த நிலையில், அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வட ஆந்திரா – ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. பின்னர், இந்த புயல்  கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கி திரும்பும் எனவும் இந்திய வானிலை மையம் அறிவித்தது.

இந்த புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக அக்னி வெயிலைன் தாக்கம் குறைந்து குளுகுளு என சூழல் நிலவி வருகிறது. சென்னையில்  நேற்று இரவு முதல் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது.   ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால்  சென்னையில், போக்குவரத்து, ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அசானி புயல் காரணமாக சென்னை வரும், புறப்படும் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டு இருப்பதாக சென்னை விமான நிலையம் தெரிவித்து உள்ளது.  அதன்  காரணமாக சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், ஹைதராபாத், மும்பை, ஜெய்ப்பூா் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 10 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.