பாலம் இடிந்தது எப்படி? – ஐஏஎஸ் அதிகாரி பதிலால் ஷாக் ஆன நிதின் கட்கரி!

பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணத்தை கேட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஐஏஎஸ் அதிகாரி கூறிய கருத்தால் அதிர்ச்சி அடைந்தார்.

பீகார்
மாநிலம் சுல்தாங்கஞ்ச் என்ற இடத்தில், கங்கை நதியின் மீது கட்டப்பட்டு வரும் சாலைப் பாலத்தின் ஒரு பகுதி, கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி அன்று இடியுடன் கூடிய மழையின் போது இடிந்து விழுந்தது. பாலம் இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்த அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் உத்தரவிட்டு உள்ளதாக சுல்தாங்கஞ்ச் எம்எல்ஏ லலித் நாராயண் மண்டல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக மூத்தத் தலைவரும், மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான நிதின் கட்கரி பேசியதாவது:

கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, பீகார் மாநிலம் சுல்தாங்கஞ்ச் என்ற இடத்தில் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. இதற்கான காரணத்தை, எனது செயலாளரிடம் கேட்டேன்.

அதற்கு அவர், பலமான சூறைக்காற்று வீசியதால், பாலம் இடிந்து விழுந்ததாகக் கூறினார். இது மாதிரியான காரணத்தை ஒரு ஐஏஎஸ் அதிகாரி எப்படி நம்புகிறார் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

பலத்த சூறைக்காற்று காரணமாக பாலம் எப்படி இடிந்து விழும் என்று என்னால் நம்ப முடியவில்லை. பாலம் இடிந்து விழுந்ததற்கு வேறு ஏதாவது காரணங்கள் இருந்திருக்க வேண்டும். தரத்தில் சமரசம் செய்யாமல், பாலங்களின் கட்டுமானச் செலவைக் குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.