சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு நீச்சல் குளத்தில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

சென்னை கேகே நகரில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 6 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
சென்னை கேகே நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். அவரது மனைவி வளர்மதி. செந்தில்குமாரின் சகோதரி உஷா என்பவர் கேகே நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீட்டுவேலை செய்துவருகிறார். கடந்த ஒரு வாரமாக தனது அண்ணன் செந்தில்குமாருடைய 6 வயது மகனான ஹரிகரனை தான் வேலை செய்யும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார் உஷா. இன்றும் வழக்கம்போல் அழைத்துச் சென்று குழந்தையை விட்டுவிட்டு வேலை செய்து கொண்டிருந்தபோது ஹரிஹரன் குழந்தைகளோடு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் விளையாடிக்கொண்டே, பின்புறமாக இருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
image
அந்த நீச்சல் குளத்திலிருந்த தண்ணீர் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் குழந்தை விழுந்ததை யாரும் கவனிக்காமல் இருந்துள்ளனர். சிறிதுநேரம் கழித்து நீச்சல் குளத்தில் குழந்தை விழுந்ததை அறிந்த குடியிருப்புவாசிகள் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றிருக்கின்றனர். ஆனால் அங்கு வரும் முன்பே குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதுகுறித்து கேகே நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.