மூன்று கோடி சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மன்சுக் மாண்டவியா

புதுடெல்லி:
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டினர்.
இதற்காக சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி முழு அளவில் மேற்கொள்ளப்பட்டது. இதேபோல், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை இந்தியா தீவிரப்படுத்தி வருகிறது.
இதற்கிடையே, கடந்த மாதம் 16ம் தேதி முதல் 12 முதல் 14 வயதிலான சிறுவர்-சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் 12 முதல் 14 வயது வரையிலான 3 கோடி சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 
அதன்படி, நாடு முழுவதும் 3 கோடி சிறுவர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பதாகவும், ஒரு கோடியே 20 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.