பிரிட்டன் பார்லி., கூட்டம் உற்சாகத்துடன் துவக்கம்| Dinamalar

லண்டன்:பிரிட்டன் பார்லிமென்டின் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம், நேற்று வழக்கமான உற்சாகத்துடன் துவங்கியது. எனினும், உடல் நிலை பாதிப்பால், ராணி எலிசபெத் பார்லி.,க்கு வரவில்லை. அவரது உரையை இளவரசர் சார்லஸ் படித்தார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில், ஆண்டுதோறும், பார்லிமென்டின் முதல் கூட்டம், ராணி இரண்டாவது எலிசபெத் உரையுடன் துவங்குவது வழக்கம். ராணி எலிசபெத், ௯௬, வயோதிகம் காரணமாக, உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான பிரிட்டன் பார்லிமென்டின் முதல் கூட்டம், நேற்று துவங்கியது.

ராணி எலிசபெத்துக்கு பதில், பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து பட்டத்து இளவரசர் சார்லஸ், இளவரசர் வில்லியம்ஸ் ஆகியோர், குதிரை படை வீரர்கள் சூழ உற்சாகமாக அழைத்து வரப்பட்டனர். ராணி எலிசபெத்தின் உரையை சார்லஸ் படித்தார். இந்த உரையில், கல்வி, விலங்குகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கொண்டு வரப்பட உள்ள சட்ட திருத்தங்கள் உட்பட, பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்று இருந்தன.

கொரோனா தொற்று பரவலால், பிரிட்டனில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால், பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு, கடும் சவால்கள் காத்திருப்பதாக, பிரிட்டன் அரசியல் வல்லுனர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.