தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இரண்டு நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இந்த புயலுக்கு அசானி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயல் இன்று பிற்பகலுக்கு காக்கிநாடா – விசாகப்பட்டினம் இடையே கரையை கடந்து, ஒடிசா நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது ஆந்திர கடலோரப் பகுதியில் மணிக்கு 95 கிலோ மீட்டர் வேகம் வரையிலும், ஒரிசா கடலோரப் பகுதியில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தின் தென் பகுதியிலும் கன மழை கொட்டி தீர்க்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் தீவிர புயலாக நிலைகொண்டிருந்த அசானி வலுவிழந்து புயலாக நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் மச்சிலிப்பட்டணத்துக்கு தென்கிழக்கு 60 கிலோமீட்டர் தொலைவில் அசானி புயல் தற்போது நிலவி வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அசானி புயல் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. விசாகப்பட்டினம், விஜயவாடா, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, ஜெய்ப்பூர், ராஜமுந்திரி விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து அந்தமான் விமானங்கள் காலதாமதம் புறப்படும்.