ஆசிய கோப்பை போட்டிக்கு தேர்வாகி உள்ள தமிழக ஹாக்கி வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

ஜகார்த்தா: ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்க தேர்வாகி உள்ள தமிழக ஹாக்கி வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து டிவிட் பதிவிட்டு உள்ளார்.

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் வரும் 23-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும். இந்த போட்டியில் பங்கேற்கும்  இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு,  ரூபிந்தர்பால் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன்,  தமிழக வீரர்களான எஸ்.மாரீஸ்வரன், எஸ்.கார்த்தி ஆகிய 2 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழக வீரர்கள் ஆசியகோப்பை போட்டியில் கலந்துகொள்வதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.  அதில்,

”இந்திய ஹாக்கி (ஆண்கள்) அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் இல்லை என்ற 13 ஆண்டுக் காத்திருப்பு கோவில்பட்டி மாரீஸ்வரன் மற்றும் அரியலூர் கார்த்தி ஆகிய இருவரால் முடிவுக்கு வந்துள்ளது.

ஜகார்த்தா ஆசிய கோப்பையை மட்டுமின்றி, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிலும் வென்று காட்ட வாழ்த்துகிறேன்!”

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.