போக்குவரத்து தொழிலாளர் ஊதிய உயர்வு – சென்னையில் இன்று பேச்சுவார்த்தை

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், துறைச் செயலர் கே.கோபால் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள், போக்குவரத்துத் துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள், நிதி நிலையை மேம்படுத்துவது, குரோம்பேட்டையில் இன்று நடைபெற உள்ள போக்குவரத்து கழகப் பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, அமைச்சர் சிவசங்கர் பேசும்போது, ‘‘சட்டப்பேரவையில் அறிவித்துள்ள, தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை, பணப் பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறை அறிமுகம், பயணக் கட்டண சலுகை அனுமதிச் சீட்டுகளை இணையதளம் மூலம் வழங்குதல், அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் பொதுவான மக்கள் உதவி மையம், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசப் பேருந்து பயண அனுமதி, திருச்சி, விருதுநகர், ராமநாதபுரத்தில் ஓட்டுநர் பயிற்சி மையம் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

மேலும், பயணக் கட்டணம் தவிர்த்து, இதர வருவாயைப் பெருக்க முயற்சிக்க வேண்டும். பணிமனைகளில் சோலார் ஒளிப்பலகைகள் அமைத்து மின்சாரம் தயாரித்தல், பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையங்கள் அமைத்தல் ஆகியவை தொடர்பாகவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.