லட்சுமணன் கோடு மீறக் கூடாது: சட்ட அமைச்சர் ரிஜிஜு கருத்து

புதுடெல்லி: நீதிமன்றங்களை மதிக்கிறோம். அதேநேரம் லட்சுமண கோட்டை மதிக்க வேண்டும் என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

தேசத் துரோக சட்டப்பிரிவை (124ஏ) ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப் பிரிவை மறுபரிசீலனை செய்வதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எனினும், இந்த சட்டப்பிரிவின் கீழ் மத்திய, மாநில அரசுகள் புதிதாக வழக்கு பதிவு செய்யவும், ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளில் விசாரணையை தொடரவும், நடவடிக்கை எடுக்கவும் இடைக்கால தடை விதித்து நேற்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று கூறும்போது, “தேசத் துரோக சட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவாக நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டோம். நீதிமன்றங்களையும் அதன் சுதந்திரத்தையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால் லட்சுமண ரேகை அல்லது ஒரு கோடு உள்ளது. அதை நாட்டின் அனைத்து அமைப்புகளும் மதிக்க வேண்டும்.

நமது அரசியல் சாசனம் நாட்டின் 3 முக்கிய அமைப்புகளுக்கும் தனி அதிகாரத்தை வழங்கி உள்ளது. இந்த 3 அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் ஜனநாயகம் வலுவடையும். ஒவ்வொரு அமைப்பும் தனது பணியை செய்யும்போது, லட்சுமண ரேகையை மனதில் கொள்ள வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.