மகிந்த ராஜபக்சே வெளிநாடு செல்ல தடை விதித்தது நீதிமன்றம்

கொழும்பு:
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வன்முறையால் இலங்கை அரசு திணறி வருகிறது. மக்களின் தொடர் போராட்டத்தால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே கடந்த 9-ந்தேதி ராஜினாமா செய்தார். இதனையடுத்து மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். 
போராட்டக்காரர்கள் மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அமைதியாக நடந்து வந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மகிந்த ராஜபக்சே வீடு, அவரது ஆதரவாளர்களின் வீடுகள், ஓட்டல்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதனால் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் தலைநகரைவிட்டு வெளியேறினர். திரிகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் அவர்கள் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கிருந்து வெளிநாடு தப்பிச் செல்லலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், ராஜபக்சே மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெராண்டோ மற்றும் அவர்களின் கூட்டாளிகள் வெளிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த  நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.