இலங்கையில் அமைதி திரும்புமா? புதிய பிரதமரை நியமிக்க கோத்தபய மும்முரம்!

இலங்கையில் வரும் வாரத்தில் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
அதிபரை ரணில் சந்தித்துப் பேசியிருப்பதால் அவர் பிரதமராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கையில் நிலவும் அமைதியின்மைக்கு மத்தியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். வரும் வாரத்தில் பொதுமக்களின் நம்பிக்கை பெற்ற புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்க உள்ளதாக கூறினார். நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட அதிபர் முறையை நீக்க இடமளிக்கும் வகையிலான 19வது சட்ட திருத்தத்தை மீண்டும் கொண்டு வர உள்ளதாக தெரிவித்தார். அதேநேரம் அரசியல் சீரமைப்புகள் குறித்து பின்னர் ஆராயப்படும் எனவும் கோத்தபயா குறிப்பிட்டார்.

இரண்டே நாட்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 9 பேர் படுகொலை மற்றும் 300 பேர் படுகாயம் அடைந்ததை வன்மையாக கண்டிப்பதாக கோத்தபயா குறிப்பிட்டார்.

வன்முறை சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த காவல் துறை தலைவருக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறிய கோத்தபயா, போராட்டம், மற்றும் வன்முறையை தூண்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல் மற்றும் ராணுவத்திற்கு உத்தரவிட்டு உள்ளதாக கூறினார்.

இதனிடையே, அதிபர் கோத்தபயவை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பெரும்பான்மை பெற்றுள்ள புதிய அரசு ஓரிரு நாட்களில் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை சுதந்திரா கட்சி உள்ளிட்ட 11 கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் பதவிக்கு 3 பேரின் பெயர்களை அதிபர் கோத்தபயாவிடம் பரிந்துரைத்ததாக முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

புதிய அரசு பதவியேற்றதும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி எம்.பி.க்கள் எதிர்கட்சி வரிசையில் அமரும் என கூறப்படுகிறது. இதனால் சஜித் பிரேமதாசவின் எதிர்கட்சி தலைவர் பதவி பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.