பதவியேற்புக்கு பின் இந்திய உறவு குறித்து பேசிய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

கொழும்பு: இலங்கையில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடந்த விரும்புவதாக மீண்டும் பிரதமர் பதவி ஏற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

மக்கள் போராட்டத்தின் காரணமாக இலங்கையில் தனது பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச திங்கள் கிழமை ராஜினாமா செய்தார். இதனால் அங்கு அவரது ஆதரவாளர்களுக்கும், போராட்டக்கார்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு பெரும் கலவரம் மூண்டது. இதனால் அங்கு அவசரநிலை நெருக்கடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நாட்டில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி, போராட்டங்களுக்கு மத்தியில் அந்நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவிற்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

முன்னதாக, அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்றைய தனது உரையில், “தற்போதைய சூழ்நிலையை கட்டுப்படுத்தவும் நாடு அராஜகத்தை நோக்கி செல்வதை தடுக்கவும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறக்கூடிய, மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய அமைச்சரவையை நியமிப்பேன்” என்று தெரிவித்திருந்தார். அதன்படி, அதிபர் கோத்தபய ராஜபக்சேயின் அழைப்பை ஏற்றுக்கொண்ட ரணில்விக்ரமசிங்கே 6-வது முறையாக இலங்கை பிரதமராக வியாழக்கிழமை (நேற்று) மாலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனிடையே பதவியேற்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ரணில் விக்ரமசிங்கேவிடம் இந்தியாவுடனான தொடர்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “இந்தியாவுடான இலங்கை உறவு முந்தைய அரசாங்கம் கடைபிடித்ததை விட, வரும் காலங்களில் இன்னும் சிறப்பானதாக மாறும். இப்போது எங்களது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் சவாலை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். அதை நிறைவேற்ற வேண்டும்” என்றார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.