34 வருடங்களை கடந்த ஜெயராம் : முதல் படத்திலேயே சாதனைகளும் ஆச்சர்யங்களும்

நடிகர் ஜெயராம் மலையாள நடிகராக அறியப்பட்டாலும் தமிழில் கடந்த முப்பது வருடங்களுக்கு முன்பே கோகுலம், கோலங்கள் உள்ளிட்ட படங்களில் நடிக்க துவங்கி தமிழ் நடிகராகவும் மாறிவிட்டவர். சமீபகாலமாக தெலுங்கிலும் அவருக்கு நல்ல நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றன. இந்த நிலையில் அவர் முதன்முதலாக மலையாளத்தில் அறிமுகமான அபரன் என்கிற திரைப்படம் வெளியாகி நேற்றோடு 34 ஆண்டுகள் ஆகின்றன.

இந்த படத்தை இயக்குனர் பத்மராஜன் இயக்கியிருந்தார். கதாநாயகியாக ஷோபனா நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார் ஜெயராம். இதில் ஜெயராம் சில சாதனைகளை செய்துள்ளார். சில ஆச்சர்யங்களும் நடந்துள்ளன.

அறிமுகமான முதல் படத்திலேயே இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் ஜெயராம். அதேசமயம் அதில் ஒன்றில் கதாநாயகனாகவும் இன்னொன்றில் வில்லனாகவும் நடித்து இருந்தார். அழகிய தமிழ்மகன் பாணியில் தவறுகளை தான் செய்துவிட்டு தன்னைப்போல் இருக்கும் நல்லவன் மேல் பழியைப் போடும் வில்லனின் கதைதான் இந்த படம். இது மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நடிகர் ஜெயராமின் மனைவியான பார்வதி, இந்த படத்தில் அவரது தங்கையாக நடித்திருந்தார் என்பது தான். பின்னாளில் அடுத்தடுத்த படங்களில் ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்து அது திருமணத்தில் முடிந்தது. அந்த வகையில் ஜெயராமின் வாழ்க்கை துணையும் அவரது முதல் படத்திலேயே அவருக்கு கிடைத்துவிட்டது ஆச்சரியமான விஷயம்தான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.