திருவனந்தபுரத்தில் கள்ளக்காதலனுடன் தீக்குளித்து தற்கொலை செய்த இளம்பெண்

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் பிந்து.

பிந்துவுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பிந்துவுக்கும், அதே பகுதியை சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. அதன்பின்பு பிந்துவும், அபிலாசும் திருவனந்தபுரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர். இவர்களுடன் பிந்துவின் 6 வயது மகனும் இருந்தார்.

இந்த நிலையில் அபிலாசுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. இதனால் அவர், பிந்துவை பிரிந்து வெளிநாட்டிற்கு சென்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அவர் மீண்டும் ஊருக்கு வந்தார். இங்கு வந்ததும் அவர் பிந்து தங்கியிருந்த வீட்டுக்கு சென்றார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு மூண்டது.

நேற்று இரவும் பிந்துவுக்கும், அபிலாசுக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த பிந்து, வீட்டில் இருந்த மண்எண்ணையை தன் மீதும் கள்ளக்காதலன் மற்றும் குழந்தையின் மீதும் ஊற்றி தீக்குளித்தார்.

இதில் குழந்தை அவர்களிடம் இருந்து தப்பித்து வீட்டை விட்டு வெளியே ஓடி சென்றது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அதற்குள் பிந்துவும், அவரது கள்ளக்காதலனும் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றி நெடுமங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பிந்து, அபிலாசின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வெளிநாட்டிற்கு சென்று வந்த வாலிபர், கள்ளக்காதலியுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.