மனநலம் பாதித்தவரை அடையாளம் காண உதவிய ஒரு சொல்

துப்புதுலக்க ஏதாவது ஒரு தடயம் போதும். அதேபோல் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை நிர்வாகத்தினர் ஒரு சொல்லை வைத்து மனநலம் பாதித்தவரின் குடும்பத்தினரை அடையாளம் கண்டுபிடித்து சேர்த்து வைத்துள்ளனர்.

இதுபற்றிய விபரம் வருமாறு:-

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை துறைமுகம் அருகே ரோட்டோரத்தில் பேசக்கூட சக்தியற்று வீழ்ந்து கிடந்த சுமார் 30 வயது வாலிபரை போலீசார் பார்த்துள்ளார்கள். உடனே அவரை மீட்டு ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்கள். குளுகோஸ் ஏற்றப்பட்டு உடல்நிலை தேறிய அவரை கீழ்ப்பாக்கம் மனநல ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்கள்.

அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற எந்த விபரத்தையும் அவரால் சொல்ல முடியவில்லை. மயக்க நிலையிலும் நினைவு தடுமாறிய நிலையிலும் இருந்த அவர் பேசிய மொழியும் தெரியவில்லை. வார்த்தைகளும் புரியவில்லை. ‘பனேரி’ என்று அவர் சொன்ன ஒரு வார்த்தை மட்டுமே அடையாளமாக இருந்தது. இந்த மாதிரி பெயர் பீகார் மற்றும் அசாம் மாநிலங்களில் கேள்விப்பட்டதாக தெரிந்ததால் அந்த மாநிலங்களில் தேட தொடங்கி இருக்கிறார்கள்.

முக்கியமாக அசாமில் பனேரி தேயிலை எஸ்டேட் என்றிருந்ததை அவரிடம் காட்டி உள்ளார்கள். அதை பார்த்ததும் தலையசைத்துள்ளார். இதை ஒரு துப்பாக எடுத்துக்கொண்டனர். அதைத்தொடர்ந்து காம்ரூப் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டுள்ளார்கள். மறுமுனையில் தமிழில் பேசியதில் உற்சாகம் அடைந்துள்ளார்கள்.

பின்னர் விபரத்தை தெரிவித்து ‘பனேரி’ என்பது என்று கேட்டுள்ளார்கள். அது உடல்குரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊரின் பெயர் என்பதை அவர்கள் மூலம் அறிந்து கொண்டனர். இதற்கிடையில் ஓரளவு குணம் அடைந்து அவரும் ஓரளவு பேசத் தொடங்கி இருக்கிறார். பின்னர் அவரது புகைப்படத்தை அங்குள்ள சமூக நலத்துறையினருக்கு அனுப்பி வைத்து அவரது குடும்பத்தை கண்டுபிடித்து விட்டனர்.

மகன் இறந்துவிட்டதால் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். வேலை தேடி நண்பர்களுடன் பெங்களூருக்கு புறப்பட்டு வந்துள்ளார். வந்த இடத்தில் தான் அவரும் மனநல பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார். உறவினர்களுடன் அவரை ரெயிலில் அசாமுக்கு அனுப்பி வைத்தார் மனநல ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் பூர்ணசந்திரா.

இதேபோல் விஜயவாடாவை சேர்ந்த ஒரு இளம்பெண் சென்னையில் மீட்கப்பட்டுள்ளார். 2 வாரம் சிகிச்சைக்கு பிறகு ஓரளவு தெளிவடைந்த நிலையில் கணவரின் போன் நம்பரை தெரிவித்துள்ளார். மருத்துவமனை ஊழியர்கள் கணவரை தொடர்புகொண்டு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர் இன்று கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

ஏற்கனவே இதேபோல் 2 முறை மராட்டிய மாநிலத்துக்கு சென்று மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.