கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரில் கோடை விழாவின் ஒரு பகுதியான வாசனை திரவிய கண்காட்சியில் ஏலக்காய், கிராம்புகளால் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் கோடைவிழாவை ஒட்டி 9-வது வாசனை திரவிய கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த கண்காட்சியை வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தொடங்கி வைத்தார். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பாதிப்பு காரணமாக இந்த கண்காட்சிகள் நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
குறிப்பாக தோட்டக்கலை சார்பில், 75 கிலோ வாசனை திரவிய பொருட்களால்லான ஏர் உழவன் காளை மாடு சிற்பம் காட்சிப் படுத்தப் பட்டுள்ளது. இச்சிற்பம் கண்காட்சிக்கு வருகைதந்த அனைவரையும் கவர்ந்தது. மேலும், பழங்குடியின பெண் தேயிலை பறிக்கும் சிற்பமும் வாசனை திரவிய பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் கண்காட்சியில் வனத்துறை சார்பிலும், தோட்டக்கலை சார்பிலும் பல்வேறு அரங்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இதனை காண ஏராளமான உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் அரங்குகளில் நிறைந்து காணப்பட்டனர். இதைத்தவிர, கண்காட்சியில் பிற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், கண்காட்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரங்கங்கள் அமைக்கப்பட்டு வருகின்றனர்.