காசி மசூதியில் கள ஆய்வு செய்ய தடை இல்லை : உச்சநீதிமன்றம்

டில்லி

காசியில் உள்ள ஞானவாபி மசூதியில்கள ஆய்வு செய்யத் தடை இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.

ஞானவாபி மசூதி உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி, காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.  மசூதியின் சுற்றுச்சுவருடன் இணைந்து உள்ள சிங்கார கவுரியம்மன் கோயில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வழிபாட்டுக்கு திறக்கப்படுகிறது.

இந்நிலையில் இங்கு ஆண்டு முழுவதும் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும், என்று வாரணாசி நீதிமன்றத்தில் 5 பெண்கள் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம், மசூதியில் கள ஆய்வு நடத்தவும், வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டது.   இந்த ஆய்வுக்குத் தடை விதிக்க உத்தரவிடக் கோரி அஞ்சுமன் இன்டெஜாமியா மஜித் கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு நேற்று தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வில் விசாரணைக்கு வந்தது.  நேற்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘ஆவணங்களை நாங்கள் பார்க்கவில்லை. எனவே விஷயம் என்ன என்று எங்களுக்குத் தெரியவில்லை.

ஆகவே விவரம் தெரியாமல் எப்படி கள ஆய்வுக்கு தடை பிறப்பிக்க முடியும்?   நாங்கள் ஆவணங்களை படித்த பிறகே உத்தரவு பிறப்பிக்க முடியும். அதே நேரம், இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க தயார்,’ என்று தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.