டெல்லி தீ விபத்து: பலி எண்ணிக்கை 30ஆக உயர்வு!

மேற்கு டெல்லி முண்ட்கா மெட்ரோ நிலையம் அருகே உள்ள அடுக்குமாடி வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 30ஐ எட்டியுள்ளது. தீயணைப்பு வீரர்களும், மீட்பு படையினரும் இரவு முழுவதும் போராடி தீயை அணைத்தனர். கட்டிடத்தில் சிசிடிவிகள், வைஃபை ரவுட்டர்கள் மற்றும் பிற மின் உபகரணங்கள் தயாரிக்கப்பட்டன. ஜெனரேட்டர் வைக்கப்பட்டிருந்த முதல் தளத்திலிருந்து ஏற்பட்ட தீ, 2 மற்றும் 3 ஆவது மாடிகளுக்கு பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது.

மாலை 4.40 மணியளவில் தீப்பிடிக்க தொடங்கியது. பின்னர், மளமளவென பரவிய தீயை ஒரளவு அணைத்து, கட்டிடத்திற்குள் தீயணைப்பு வீரர்கள் செல்லும் போதே, பலர் உடல்கருகி பலியாகியிருந்தனர். உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்தது. முதலில் 14, பின்னர் 16, 20, 27 என அதிகரித்து வந்தது. தற்போது பலி எண்ணிக்கை 30ஐ எட்டியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கட்டிடடத்தில் இருந்த சிசிடிவி கேமரா அலுவலகத்தைச் சேர்ந்த ஹரீஷ் கோயல், வருண் கோயல் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கட்டிடத்தின் உரிமையாளரான மனீஷ் லக்ராவை போலீஸார் தேடி வருகின்றனர். கட்டிடத்தில் தீ தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை என தெரிகிறது.

இச்சம்பவம் குறித்து பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி

டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிர் இழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என பதிவிட்டிருந்தார். மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ50 ஆயிரமும் வழங்கப்படும்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

டெல்லியில் உள்ள முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பலர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்

டெல்லி தீ விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.