“5 வருஷத்துல 60 முறை மனு கொடுத்துட்டேன்..!" – நான்கு சக்கர வாகனத்துக்காக அல்லாடும் மாற்றுத்திறனாளி

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு, எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கால்கள் செயலிழந்த நிலையில், மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் நடைபாதையில் தவழ்ந்தபடி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்களிடம் தன்னுடைய நிலைமை குறித்து புலம்பியபடி சென்றார்.

இதையடுத்து, அவரிடம் சென்று கேட்டபோது, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த உதயகுமார் (34), என்றும் இலவச நான்கு சக்கர வாகனம் கேட்டு ஐந்து ஆண்டுகளாக அலைந்து வருவதாகும் வேதனையுடன் தெரிவித்தார்.

அவரிடம் மெல்ல பேச்சுக்கொடுத்தோம். “நான் பி.இ எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் முடித்துள்ளேன். என்னோடு உடன் பிறந்த அண்ணன்கள் இருவரும் வெளியூரில் வேலை பாத்துட்டு வராங்க, அப்பா இறந்துட்டாங்க. நானும் அம்மாவும் மட்டும்தான் பரமக்குடியில் இருக்கோம். எலக்ட்ரிக்கல் படிச்சு முடிச்சு இருக்கேன், ஆனாலும் கால்கள் செயலிழந்து விட்டதால கம்பெனிகள் என்னை வேலைக்கு எடுக்க தயங்கினாங்க. அதனால பரமக்குடியில வீடுகள், கடைகளில் எங்காவது எலக்ட்ரிகல் வேலை சொன்னாங்கன்னா அதை செஞ்சிட்டு வர்றேன்.

நடைபாதையில் அமர்ந்திருந்த உதயகுமார்

என்னால் யாருடைய உதவியும் இன்றி பேருந்து படிக்கட்டில் அல்லது இரு சக்கர வாகனத்தின் பின்புறம் ஏறி அமர முடியாது. இதனாலேயே பல இடங்களில் கூப்பிடும் வேலைகளுக்கு என்னால் செல்ல முடியவில்லை. நான்கு சக்கர வாகனம் வாங்குவதற்கும் என்னிடம் வசதி இல்லை. அதற்காகத்தான் தமிழக அரசின் நான்கு சக்கர இலவச வாகனம் கேட்டு கடந்த 2017-ம் ஆண்டுமுதல் மனு கொடுத்து வருகிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை 60-க்கும் மேற்பட்ட முறை மனு கொடுத்துவிட்டேன். ஆனால், எந்தப் பயனும் இல்லை.

நான் பரமக்குடியிலிருந்து ராமநாதபுரத்துக்கு 34 கிலோமீட்டர் பஸ்சில் வந்து, அங்கிருந்து டவுன் பஸ் மூலம் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து ஒவ்வொரு முறையும் மனு கொடுத்துவிட்டுச் செல்கிறேன். நான் பரமக்குடியிலிருந்து ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு வருவதற்கு பலரது உதவியை நாட வேண்டியிருக்கிறது.

எனக்கு கால்கள் மட்டும்தான் ஊனம்… மனது ஊனம் இல்லை, யாரிடமும் கையேந்த கூடாது என்ற மன உறுதியோடு உழைத்து வருகிறேன். ஆனால், நான்கு சக்கர வாகனத்திற்கு ஐந்து ஆண்டுகளாக என்னை பிச்சைக்காரன்போல் அலைய விடுவது எதற்காக இப்படி பிறந்தோம் என்ற எண்ணத்தை என்னுள் ஏற்படுத்துகிறது.

என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம் பரிதாபப்படுகிறார்கள், அது எனக்கு பிடிக்காது என்றாலும், அந்த பரிதாபம்கூட காட்டாமல் மனிதாபிமானமற்ற முறையில் அதிகாரிகள் என்னை நடத்துகிறார்கள்‌. இங்குள்ள அனைத்து அதிகாரிகளையும் எனக்கு தெரியும். நான் மனு கொடுக்க வரும்போதெல்லாம், `இவனுக்கு வேற வேலையே இல்லை..’ என்றபடி என் மனுவை வாங்கிக்கொண்டு, `சரி அடுத்தமுறை பார்ப்போம்’ எனச் சொல்வார்கள்.

அவர்கள் நான்கு சக்கர வாகனம் எனக்கு தரமுடியாது என்று சொல்லிவிட்டால் கூட பரவாயில்லை. நான் கடும் சிரமப்பட்டு இவ்வளவு தூரம் அலைய வேண்டிய அவசியம் இருக்காது. நான் பேருந்துகளில் வந்து போகிற செலவை சேர்த்து வைத்தாவது வாகனத்தை வாங்கிக் கொள்வேன்.

உதயகுமார்

அதிகாரிகளின் அலட்சியத்தால் நான் சிரமப்படுவது மட்டுமன்றி, எனக்காக பிறரை சிரமப்படுத்துவது எனக்கு வேதனையாக இருக்கிறது” என்றார் கண்ணீர் மல்க.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பொறுப்பு அலுவலராக இருக்கும் கதிர்வேலிடம் பேசினோம்.

“நான் சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலராக பணியாற்றி வருகிறேன். கூடுதல் பொறுப்பாக ராமநாதபுரத்தை கவனித்து வருகிறேன். நான்கு சக்கர வாகனம் கேட்டு மாற்றுத்திறனாளி உதயகுமார் வந்துள்ள தகவல் அங்குள்ள அதிகாரிகள் மூலம் எனக்கு கிடைத்தது. ஏற்கெனவே அவருடைய மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு நான்கு சக்கர வாகனம் இவருக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓரிரு நாள்களில் உதயகுமாருக்கு நான்கு சக்கர வாகனம் வழங்கப்படும்” எனக் கூறினார்‌.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.