இலங்கை அதிபருக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு விக்ரமசிங்கே ‘திடீர்’ ஆதரவு

நிராகரிப்பு
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே கடந்த 9-ந் தேதி விலகினார். அவருடைய ஆதரவாளர்களின் தாக்குதலுக்கு பதிலடியாக கலவரம் வெடித்தது.
கடந்த 12-ந் தேதி, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுக்கொண்டார். அவர் இடைக்கால அரசில் இணையுமாறு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார். ஆனால் அவரது அழைப்பை எதிர்க்கட்சிகள் நிராகரித்து விட்டன.

அதே சமயத்தில், ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி, ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்தது. நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் இடைக்கால அரசில் இடம் பெறாவிட்டாலும், இலங்கையை மீட்பதற்கான விக்ரமசிங்கேவின் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக உறுதி அளித்தன.
போராட்டம் நீடிக்க வேண்டும்
இந்தநிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி, கடந்த மாதம் 9-ந் தேதியில் இருந்து காலிமுக திடலில் போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, யாரும் எதிர்பாராதவகையில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பி.பி.சி. சிங்கள சேவைக்கு அளித்த பேட்டியில் ரணில் விக்ரமசிங்கே கூறியதாவது:-
இலங்கை அரசியல் முறையில் மாற்றத்தை கொண்டுவர இந்த போராட்டம் நீடிக்க வேண்டும். நாட்டை தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பை அந்த இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளட்டும்.
அவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். நாட்டின் எதிர்கால கொள்கையை வடிவமைப்பதில் அவர்களின் கருத்துகள் கேட்கப்படும். அவர்களது நலன்களை ஆய்வு செய்ய ஒரு கமிட்டியை நான் அமைத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
எம்.பி.க்களுக்கு கோத்தபய அழைப்பு
இதற்கிடையே, புத்தர் பிறந்த நாளான புத்த பூர்ணிமா, ‘வேசக் போயா’ தினமாக நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒரு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தற்போதைய சூழ்நிலையை நாம் மனதில் கொண்டு செயல்பட வேண்டும். கடினமான சூழ்நிலையில், நெகிழ்வுத்தன்மையுடன் இயங்குவது அவசியம். நாடு சிக்கலான நிலைமையில் இருக்கும்போது, இதற்கு தீர்வு காண அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் உடனடியாக இணைந்து செயல்பட வேண்டும். முதன்மையான இலக்கை விட்டு விலகாமல், நாம் விரும்பிய நோக்கத்தை எட்டுவதே நமது உண்மையான இலக்காக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஸ்திரத்தன்மை
பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘சுயகட்டுப்பாடும், ஸ்திரத்தன்மையும் மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும். மக்களின் வாழ்க்கையை மீட்டு கொண்டுவர உறுதி எடுத்துக் கொள்வது புத்தருக்கு செய்யும் தொண்டு’’ என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, இந்திய தூதரகம் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.