தமிழகத்தில் ஜூன் 12-ம் தேதி ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்: சுகாதாரத் துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஜூன் 12-ம் தேதி 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னையில் அவர் நேற்று கூறியதாவது. தமிழகத்தில் 93.55 சதவீதம் பேர் முதல் தவணையும், 81.55 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். வாரம்தோறும் சனிக்கிழமையில் நடத்தப்பட்ட மெகாதடுப்பூசி முகாம்கள் மூலம் இது சாத்தியம் ஆகியுள்ளது. தற்போது, தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் முகாம்கள் நடக்கவில்லை.

வரும் ஜூன் 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் சிறப்புமெகா கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும். சுகாதாரத் துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த முகாமை நடத்த உள்ளன.

இதேபோல, மாதம் ஒருமுறை தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் மற்றும் இரண்டாம் தவணை போடாமல் இருக்கும் சுமார் 2 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

30 பேருக்கு கரோனா தொற்று: தமிழகத்தில் நேற்று ஆண்கள் 19, பெண்கள் 11என மொத்தம் 30 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 16 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 54,621 ஆகஅதிகரித்துள்ளது. இதுவரை 34 லட்சத்து 16,237 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று79 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தமிழகம் முழுவதும் 359 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று உயிரிழப்பு இல்லை.தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 9,068 பேர் இறந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் தொற்று பாதிப்பு 35 ஆகவும், சென்னையில் 21 ஆகவும் இருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.