கர்நாடகத்தில் ஏழை, நடுத்தர மக்களுக்காக மாவட்டந்தோறும் சுகாதார மேளா: மந்திரி சுதாகர்

பெங்களூரு :

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் 2 நாட்கள் சுகாதார மேளா நேற்று முன்தினம் தொடங்கியது. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக இந்த மேளா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் இந்த மேளாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஒரே இடத்தில் மருத்துவ பரிசோதனை, நோயாளிகளுக்கு சிகிச்சை, மருந்து வழங்குதல் உள்ளிட்டவை சுகாதார மேளாவில் இடம் பெற்றிருந்தது.

இந்த நிலையில் சுகாதார மேளா குறித்து கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறுகையில், “சிக்பள்ளாப்பூரில் நடைபெற்ற 2 நாட்கள் சுகாதார மேளாவில் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் இலவச மருத்துவ வசதி பெற்று பயன் அடைந்துள்ளனர். 2 நாட்கள் நடைபெற்ற மேளா எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது.

இதுபோன்று, கர்நாடகத்தில் மாவட்டந்தோறும் சுகாதார மேளா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ்பொம்மையுடன் ஆலோசித்து விட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.