ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிப்பு; மசூதிக்கு சீல் வைக்க கோர்ட் உத்தரவு| Dinamalar

வாரணாசி: வாரணாசி ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மசூதி பகுதிக்கு சீல் வைக்க வாரணாசி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

உ.பி., மாநிலம் வாரணாசியில் உள்ள விஸ்வநாதர் கோவில் அருகே உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. இந்த சிலைக்கு தினமும் பூஜை செய்ய அனுமதி கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம், மசூதியில் கள ஆய்வு மேற்கொள்ள, ஐந்து பேர் அடங்கிய குழுவை அமைத்தது. அறிக்கையை, 17ம் தேதிகுள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

இதையடுத்து, மசூதியில் ஆய்வு பணி நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி, பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மசூதியில் மூன்றாவது நாளாக இன்றும்(மே 16) வீடியோ பதிவுடன் ஆய்வு பணி நடந்தது. ஆய்வில் அனைத்து தரப்பினரும் திருப்தி அடைந்திருப்பதாக, மாவட்ட கலெக்டர் கவுசல் ராஜ் சர்மா தெரிவித்தார். இந்நிலையில், ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு சில் வைக்க மாவட்ட கலெக்டருக்கு வாரணாசி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

latest tamil news

கோர்ட் உத்தரவையடுத்து, அந்த பகுதிக்குள் யாரும் நுழைய தடை விதிக்கப்பட்டது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மசூதியில் வீடியோ ஆய்வு செய்ய தடை கோரிய வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நாளை(மே 17) விசாரணைக்கு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.