‘கத்தியின் மேல் நடப்பது போன்ற சவால் எனக்கு’- ரணில் விக்ரமசிங்கே

Sril Lanka PM Ranil Wickremesinghe address to nation highlights: நான் பொறுப்பேற்றது கத்தியின் மேல் நடப்பதை போல் சவால் எனக்கு என இலங்கை பிரதமர் ரணில் விக்ரம்சிங்கே நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். மக்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். ரணில் இலங்கை பிரதமராக 6 ஆவது முறையாக பொறுப்பேற்றுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பொறுப்பேற்றது முதல், இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் தொடர் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். இதற்காக மந்திரி சபையை விரிவுபடுத்தும் பணிகளையும் ரணில் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இலங்கையின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

ரணில் தனது உரையில், “நாட்டை மீண்டும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல என்னால் முடியும். நம் நாடு சுதந்திரமான நாடு, அனைத்து வசதிகளும் நிறைந்த நாடு. மனித வளம் போராட்டக் களத்தில் வீணடிக்கப்பட தேவையில்லாத நாடு. நான் பொறுப்பேற்றது கத்தியின் மேல் நடப்பதைவிட பயங்கரமான சவால். எனது பாதை நெருக்கடியானது, ஆழமானது. மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடக்க வேண்டி உள்ளது. என்னிடம் கைப்பிடி இல்லை, என் கால்களில் கழற்ற முடியாத காலணிகளை அணிந்துள்ளேன். 

நான்கில் ஒரு பங்கு மின்சாரம் எண்ணெய் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், தினமும் 15 மணி நேரமாக மின்வெட்டு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்த நெருக்கடியைத் தவிர்க்க நாம் ஏற்கனவே பணம் பெற்றுள்ளோம். நுகர்வோருக்கு எரிவாயுவை வழங்க 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை நாம் உடனடியாகப் பெற வேண்டும். 

எரிவாயு மற்றும் மண்ணெண்னை அவசர தேவையாக உள்ளது. இலங்கையில் உள்ள அனைத்து வங்கிகளிலும் டாலர் கையிருப்பில் தட்டுப்பாடு உள்ளது. இந்திய கடன் உதவியின் கீழ் மே 19, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 2 டீசல் கப்பல்களும், மே 18, மே 29 ஆகிய தேதிகளில் 2 பெட்ரோல் கப்பல்களும் வரவுள்ளன.

நாம் பல கடுமையான கவலைகளை எதிர்கொண்டுள்ளோம். வரும் இரண்டு மாதங்கள் நமது வாழ்வில் கடினமானதாக இருக்கும். இலங்கையின் பொருளாதார நிலையை சீர்செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது. தற்போது, ​​நமது கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது.  

தற்போது இலங்கையின் பொருளாதாரம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும் ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயமாக்க நான் முன்மொழிகிறேன். கடந்த 4 மாதங்களாக மருந்து இறக்குமதிக்கான தொகையை அரசு செலுத்தவில்லை.

2022ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட அபிவிருத்தி வரவு செலவுத் திட்டத்திற்கு மாற்றாக புதிய வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க திட்டமிட்டுள்ளோம். அதனை சலுகை வரவு செலவுத் திட்டமாக முன்வைக்க உத்தேசித்துள்ளோம்.

இதையும் படியுங்கள்: பிரதமரின் வீடு கட்டும் திட்டம்; யாருக்கெல்லாம் பலன் கிடைக்கும்?

தற்போதைய பிரச்னைகளை தீர்க்க அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய சபை அல்லது அரசியல் கூட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை அவசரமாக உள்ளது. தற்காலிக, நிரந்தர திட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்.

பிரதமர் பதவியை நான் கோரவில்லை. நாடு எதிர்கொண்டுவரும் சவாலான சூழலை பார்த்து அதிபர், இந்த பொறுப்பை ஏற்க அழைப்பு விடுத்தார். அடுத்த 2 மாதங்கள் நமக்கு கடுமையானதாக இருக்கும்.” இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உரையாற்றினார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.