`எனக்குப் பொய் சொல்ல விருப்பமில்லை; நமது எதிர்காலம் இன்னும் கடினமாக இருக்கும்' -இலங்கை பிரதமர் ரணில்

இலங்கையில் மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார். இலங்கை அமைச்சரவையில் தன் கட்சி சார்பாக ஒரேயொரு எம்.பி-யாக ரணில் விக்ரமசிங்க இருந்தபோதிலும், அதிபர் கோத்தபய ராஜபக்சேவால் கடந்த மே 12-ம் தேதி பிரதமராகப் பதவியேற்றார். இந்த நிலையில், நாடு எதிர்கொள்ளும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் எதிர்வரும் சவால்கள் குறித்து, நாட்டு மக்களுக்கு ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார்.

அப்போது பேசிய ரணில் விக்ரமசிங்க, “கடந்த வியாழன் அன்று நான் பிரதமராகப் பதவியேற்றேன். ஆனால், பிரதமர் பதவியைக் கோரவில்லை. நாட்டின் கடினமான சூழ்நிலையைக்கண்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்ததன்பேரிலே பதவியேற்றேன்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க

2019 நவம்பரில், நமது அந்நியச் செலாவணி கையிருப்பு 7.5 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. ஆனால் இன்றைக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் திரட்டுவதே பெரும் சவாலாக உள்ளது. இன்னும் ஒருநாளைக்கு மட்டுமே நம்மிடம் பெட்ரோல் இருப்பு உள்ளது. உண்மையை மறைக்கவோ, மக்களிடம் பொய் சொல்லவோ எனக்கு விருப்பம் இல்லை. நமது எதிர்காலமானது, நாம் கடந்து வந்த கடினமான காலங்களை விடவும், இன்னும் கடினமாக இருக்கும். இது பயமுறுத்துவதாக இருந்தாலும் இதுதான் உண்மை. இருப்பினும் எதிர்வரும் சவால்களையும், துன்பங்களையும் நாம் எதிர்கொள்வோம். வரும் நாள்களில் நமது நட்பு நாடுகள் நமக்கு உதவுவார்கள், உதவியும் வருகிறார்கள். எனவே அடுத்த இரண்டு மாதங்களுக்கு நாங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு விரைவில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். இது அனைத்து தரப்பினருடனும் விவாதிக்கவும், நீண்ட கால செயல் திட்டங்களுக்கான முடிவுகளை எடுக்கவும் எங்களுக்கு உதவும்” எனக் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.