கவுகாத்தி,
அருணாசல பிரதேச மாநிலம், சீன எல்லையை ஒட்டி 1,038 கி.மீ. எல்லையை பகிா்ந்து கொள்கிறது. குறிப்பாக மாநிலத்தின் 60 பேரவைத் தொகுதிகளில் 13 தொகுதிகள் சீன எல்லையை ஒட்டி உள்ளன. அருணாசலப் பிரதேசத்தை சீன அரசு தங்கள் நிலப்பகுதியாக நீண்டகாலமாக சொந்தம் கொண்டாடி பிரச்னை ஏற்படுத்தி வருகிறது. எனவே இப்பகுதியை மேம்படுத்த இந்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
இந்த சூழலில், அருணாசல பிரதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் சீனா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய ராணுவத்தின் கிழக்கு கமாண்ட் பொதுப் பிரிவு அதிகாரி லெப்டினட் ஜெனரல் ஆபி கலிடா கூறுகையில்,
“திபெத் பிராந்தியத்தில் அசல் எல்லைக்கட்டுப்பாடு பகுதிக்கு அப்பால் சீனா பல்வேறு உள்கட்டமைப்புகளை வசதிகளை மேம்படுத்தி வருகிறது. சாலைகளை மேம்படுத்துதல், ரெயில்,வான் போக்குவரத்து தொடர்பு, 5 ஜி மொபைல் சேவை ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளை சீனா உருவாக்கி வருகிறது.
எல்லையோரம் அனைத்து வசதிகளுடன் கூடிய கிராமங்களையும் உருவாக்கி வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கையை நாம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நமது உள்கட்டமைப்பு வசதிகளும் திறன்களும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நாம் வலுவான நிலையில் உள்ளோம்” என்றார்.