அசாமை புரட்டிப் போட்ட கனமழை – வெள்ளத்தில் மிதக்கும் ரயில்கள்!

அசாம் மாநிலத்தில் மழை வெள்ளம் காரணமாக 29 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.

வட கிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்தில், கடந்த சில நாட்களாக, கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர் மழை காரணமாக, பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கொபிலி ஆற்றில் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடுகிறது. பிரம்மபுத்திரா ஆற்றிலும் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடுகிறது.

இந்த ஆண்டில் முதல் முறையாக ஏற்பட்டுள்ள இந்த வெள்ளப் பெருக்கால் கச்சார், திமஜி, ஹொஜய், கர்பி அங்லோங் மேற்கு, நகாவன் மற்றும் கம்ரூப் (மெட்ரோ) ஆகிய 6 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. தொடர் மழையால் தீம ஹசாவோ மாவட்டத்தின் 12 கிராமங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. சுமார் 20 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

1,400 பயணிகளை உள்ளடக்கிய 2 ரயில்கள் நடுவழியில் நின்றன. அவர்களில் 1,245 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். 119 பயணிகள் விமானம் வழியே சில்சார் கொண்டு செல்லப்பட்டனர். பெரிய அளவிலான நிலச்சரிவுகள் மற்றும் தேங்கிய நீர் ஆகியவற்றால் ரயில்வே தண்டவாளங்கள், பாலங்கள் மற்றும் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.

வெள்ளம் பாதித்த மக்களை மீட்கும் பணியில் ராணுவம், துணை ராணுவ படைகள், அசாம் பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் அவசரகால சேவை துறையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலச்சரிவு, ரயில்வேப் பாதைகளில் வெள்ள நீர் தேக்கம் உள்ளிட்ட காரணங்களால், சுமார் 29 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக இந்தியன் ரயில்வே தகவல் தெரிவித்து உள்ளது. நிலைமை சீரானதும் மீண்டும் ரயில் சேவை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.