‘ஷாக்’ ஏற்பட்டு இளைஞர் இறப்பு – தவறான நரம்பில் செலுத்தப்பட்ட போதை ஊசியால் விபரீதம்!

போதைபொருள் எடுத்துக்கொண்ட இளைஞர் ஒருவர் ’ஷாக்’ ஏற்பட்டு இறந்த சம்பவம் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் மோஹா, ப்ரீத் நகரைச் சேர்ந்த ராஜ்குமார்(24) என்ற இளைஞர் போதைப்பொருள் பயன்படுத்தி வந்திருக்கிறார். மே 15ஆம் தேதி வழக்கம்போல் போதை ஊசி செலுத்திய அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதனையறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மோகாவில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அவர் ஃபரித்கோட்டில் உள்ள குரு கோபிந்த் சிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மே 16ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.
image
இதுகுறித்து ராஜ்குமாரின் தாயாஅர் பரம்ஜித் கவுர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போதைப்பொருளுக்கு பிரபலமான சதான் வாலி பாஸ்தி பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அதேப் பகுதியைச் சேர்ந்த ககன்தீப் சிங், சூர்யா, காளி மற்றும் மணி சிங் ஆகிய நான்குபேர் மீது இந்திய சட்டப்பிரிவு 304-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
image
இந்த சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் லட்சுமன் சிங் கூறுகையில், அந்த இளைஞர் அளவுக்கதிகமாகவோ அல்லது தவறான நரம்பிலோ ஊசியை செலுத்தியிருக்கவேண்டும்; அதனால்தான் திடீரென அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.