குளத்தில் மூழ்கிய மகள்களை காப்பாற்றி தன் உயிர் நீத்த தாய்! தியாக சோக சம்பவம்

பட்டுக்கோட்டையில் குளத்தில் மூழ்கிய தனது இரு மகள்களை காப்பாற்றி விட்டு தாய் ஒருவர் உயிர் நீத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள வாழைக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் வின்சன்ட். கூலித்தொழிலாளியான இவரது மனைவி பெயர் ஸ்டெல்லா(47). இந்நிலையில் இன்று ஸ்டெல்லா அதே பகுதியில் உள்ள குளத்திற்கு தன்னுடைய இரு மகள்களுடன் குளிக்கச் சென்றுள்ளார். கரையில் நின்று குளித்துக் கொண்டிருந்தபோது இளையமகள் பெனினாள் தண்ணீரில் திடீரென மூழ்கியுள்ளார். இதனைப் பார்த்த மூத்த மகள் வின்சி நீரில் மூழ்கிய தங்கையை காப்பாற்ற முயன்றிருக்கிறார். ஆனால் அவரும் தண்ணீரில் மூழ்கியிருக்கிறார்.
image
இதனால் செய்வதறியாது திகைத்த ஸ்டெல்லா உடனடியாக தண்ணீரில் இறங்கி மகள்கள் இருவரையும் கரைப்பகுதியில் தள்ளிவிட்டிருக்கிறார். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் வந்து இந்த இரு பெண்களையும் காப்பாற்றியிருக்கின்றனர். இதற்கிடையே தண்ணீரில் மூழ்கிய ஸ்டெல்லாவின் கைகள் மட்டும் வெளியில் தெரிய, அந்த இளைஞர்கள் நீச்சல் அடித்துச்சென்று ஸ்டெல்லாவை மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.
image
இதனையடுத்து அதிராம்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர். இரு மகள்களை காப்பாற்றிவிட்டு தாய் தன்னுடைய உயிரை நீத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.