சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் – முழு விவரம்

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்று விபத்தில் சிக்கி 98 பேர் இந்தாண்டில் உயிரிந்துள்ளனர் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை பெருநகரில் 2021 ஆம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளை ஆய்வுசெய்ததில், இரு சக்கர வாகன விபத்துக்களில் 611 பேர் உயிரிழந்ததாகவும், 3294 பேர் காயம் அடைந்ததாகவும் தெரியவந்துள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததால் 477 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 134 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 2,929 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 365 பின்னிருக்கை பயணிகள் காயமடைந்துள்ளனர். மேலும் 01.01.2022 முதல் 15.05.2022 வரையில் இரு சக்கர வாகன விபத்துக்களில் 98 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 841 பேர் காயம் அடைந்துள்ளனர்.
image
இதில் ஹெல்மெட் அணிந்து பயணித்ததில் 80 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 18 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் 714 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 127 பின்னிருக்கை பயணிகள் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் சிறப்பு வாகன தணிக்கைகளை நடத்தி வாகன விதி மீறுபவர்களை கண்காணித்தும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதை மேம்படுத்துவதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபரின் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபரும் ஹெல்மெட் விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கான சிறப்பு வாகன தணிக்கை மற்றும் விழிப்புணர்வு பரப்புரைகள் தொடரும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
image
ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபர் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, விலைமதிப்பற்ற மனித உயிர்களை காக்கவும், விபத்தில்லா நகரை அடையவும் சென்னை காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு சென்னை போக்குவரத்து காவல்துறை கேட்டு கொண்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.