ராகுல் திரிபாதி அதிரடி ஆட்டம் : மும்பைக்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஐதராபாத் அணி

மும்பை,
ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வரும்  65-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்  – சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

மும்பை அணி ஏற்கனவே  பிளே ஆப்  சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. ஆனால் பிளே ஆப் சுற்றுக்கு  தகுதிபெற ஐதராபாத் அணிக்கு இன்றைய போட்டி முக்கியமானதாகும். இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா – பிரியம் கார்க் களமிறங்கினர். அபிஷேக் சர்மா  9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன் பிறகு கார்க் உடன் ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரியம் கார்க் 42 ரன்களில் ரமன்தீப் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய திரிபாதி அரைசதம் கடந்து அசத்தினார். நிக்கோலஸ் பூரன் தனது பங்கிற்கு 22 பந்துகளில் 38 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார்.
சிறப்பாக விளையாடி வந்த ராகுல் திரிபாதி 44 பந்துகளில் 76 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது.
மும்பை அணி தரப்பில் ரமன்தீப் சிங் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்குகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.