கர்நாடகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

பெங்களூரு,
கர்நாடகத்தில் கோடை வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்த நிலையில் தலைநகர் பெங்களூருவில் நேற்றும் பகலிலேயே மழை பெய்தது. லேசாக பெய்த இந்த மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் வழிந்தோடியது. சில பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதற்கு முன்பு இல்லாத வகையில் நடப்பு ஆண்டில் கோடை மழை பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. 

இந்த மழை இன்று (புதன்கிழமை) முதல் மேலும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக இன்று கடலோர மாவட்டங்கள், சாம்ராஜ்நகர், சிக்கமகளூரு, ஹாசன், சிவமொக்கா, குடகு, மண்டியா, மைசூரு மற்றும் தென் கர்நாடகத்தின் உள் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு நகர், பல்லாரி, பெங்களூரு புறநகர், சிக்பள்ளாப்பூர், சித்ரதுர்கா, தாவணகெரே, கோலார், ராமநகர், துமகூரு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னல் இருக்கும் என்றும் அந்த மையம் கூறியுள்ளது. ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால், இந்த ஆண்டு நீர் பிரச்சினை இருக்காது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, சாம்ராஜ்நகர், குடகு, தார்வார், பெலகாவி, பீதர், கலபுரகி, யாதகிரியில் மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.