சென்னை: 100 நாள் வேலைத் திட்டத்திற்கு பிடிஓ பொறுப்பாக்கப்படுவார் என்ற ஊராக வளர்ச்சி துறை இயக்குநரின் உறுதியைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
நூறு நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் விதிமீறல்களை தடுக்கக் கோரி தமிழநாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், சென்னை – சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி இயக்குநர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டம் இன்று காலை முதல் நடைபெற்று வந்தது.
இதனைத் தொடர்ந்து, சங்க நிர்வாகிகளுடன் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி இயக்குநர் பிரவீன் நாயருடன் சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அவர் அளித்த வாக்குறுதிகள்:
> மாற்றுத் திறனாளிகள் வேலை கோரும் மனுவை வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மட்டும் அளித்தால் போதும். அவர் தனி வேலை செய்வோர் பட்டியல் தயாரித்து பணிகளில் ஈடுபடுத்துவார்.
> மாற்றுத் திறனாளிகளின் சட்ட உரிமைகளை ஊராட்சி தலைவர்கள் மீறினால் மாவட்ட ஆட்சியர் மூலம் ஒழுங்கு நடவடிக்கை.
> வேலை அட்டையில் ஊராட்சி தலைவர்கள் கையொப்பம் இடுவது தடுப்பது குறித்து மத்திய அரசின் வழிகாட்டுதல் பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
> 100 நாள் வேலை உள்ளிட்ட ஊராட்சி இயக்ககம் மூலம் அமல்படுத்தப்படும் திட்டங்கள் மீது வரும் புகார்களை தீர்க்க வட்டார வளர்ச்சி அலுவலர் மாதந்தோறும் 2-வது செவ்வாய் கிழமையும், மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குநர் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் சிறப்பு குறை தீர் கூட்டங்கள் நடத்த உத்தரவிடப்படும்.
இந்த வாக்குறுதிகள் எழுத்துபூர்வ உத்தரவாக பிறப்பிக்கப்படும் என இயக்குநர் பிரவீன் நாயர் தெரிவித்ததைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.