இந்திய மக்களின் குடும்ப நலம் குறித்த சந்தேகங்கள்

ப சிதம்பரம்

இந்திய மக்கள் தொகையில் 26.5 சதவீதம் பேர் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். ஆனால் முதியோர்களின் விகிதம் அதிகரித்து வருவதால் வயது குறைந்த இளைஞர்களின் விகிதம் குறைந்து வருகிறது.

ஐந்தாவது தேசிய குடும்ப நல ஆய்வு 2019-21 ல் நடத்தப்பட்டது. இதற்கு முந்தைய கணக்கெடுப்பு 2015-16 ல் நடத்தப்பட்டது. இரண்டுமே தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியில் இருந்த காலகட்டங்களில் தான் நடத்தப்பட்டன. எனவே இரண்டு கருத்துக்கணிப்புகளுக்கிடையேயான மாற்றங்கள் 2014-15 வரை பின்பற்றப்பட்ட கொள்கைகள் திரு. நரேந்திர மோடியின் அரசாங்கத்தின் முடிவுகளின் படியே அமைந்தன.

இதற்கு முந்தைய கணக்கெடுப்புகளில் இருந்ததைப் போலவே இந்தக் கணக்கெடுப்புகளிலும் சுகாதார மேம்பாடு தொடர்பான அடையாளங்களாக மக்கள் தொகை, குடும்ப அமைப்பு, எழுத்தறிவு, திருமணம் நடைபெறும் வயது, கருத்தரிப்பு விகிதம், கருவுற்ற தாய்மார்கள் மற்றும் அவர்களது குழந்தைகளின் சுகாதார நிலை, தடுப்பூசிகள் தொடர்பான செய்திகள் மருத்துவ சிகிச்சையின் தரம், இரத்த சோகை அளவு, பெண்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரம், புகையிலை, மதுபானம் போன்றவற்றின் பயன்பாடு ஆகியவை உள்ளன. நான்கு ஆண்டுகள் இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்த இரு கணக்கெடுப்புகளிலும் உள்ள எண்கள் தான் புள்ளிவிவர மதிப்பீடுகளாக இருக்கின்றன. இரண்டு கணக்கெடுப்புகளும் ஒரே வழிமுறை அடிப்படையில் மேற்கொள்ளப் பட்டவை. இரண்டுக்கும் உள்ள எண்ணிக்கை வேறுபாடுகள் தான் நமக்குப் பாடங்களாக இருக்கின்றன. சில மாற்றங்கள் நமக்குப் பெருமை தருபவையாகவும், சில மனச் சோர்வை அளிப்பதாகவும், சில சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புபவையாகவும் இருக்கின்றன.

நல்ல செய்தி

இதில் மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி என்னவென்றால் பெண்களின் கருவுறுதல் விகிதம் 2.2 என்பதிலிருந்து 2.0 ஆகக் குறைந்திருக்கிறது என்பதே. அதாவது சராசரியாக பெண்கள் குழந்தை பெறும் அளவு குறைந்திருக்கிறது. கருத்தரிப்பு விகிதம் 2.0 ஆகக் குறைந்திருப்பது நல்ல செய்திதான் என்றாலும் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதால் அதைத் தனியாகவும், விரிவாகவும் விவாதிப்பது அவசியம். அதேவேளையில், இந்திய மக்கள் தொகை வருங்காலத்தில் மேலும் அதிகரிக்காது என்று நிம்மதி அடையலாம். முன்னர் எதிர்பார்த்ததைவிட, மக்கள் தொகை எண்ணிக்கை வேகமாக அதிகரித்து விடாமல் இதே எண்ணிக்கையிலேயே தொடர அதிக வாய்ப்பு இருக்கிறது. இது ஒரு நல்ல செய்தியாகும். இந்தியாவில் பிறந்த 88.6% குழந்தைகள் அரசு மருத்துவமனைகள் அல்லது தனியார் மருத்துவமனைகளில் பிறந்துள்ளன. இது 2014-15 இல் 78.9% ஆக இருந்தது. பெண் குழந்தைகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. பெண் குழந்தையாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளது. 1,000 ஆண் குழந்தைகளுக்கு 991 ஆக இருந்த பெண் குழந்தைகள் விகிதம் இப்போது 1,020 ஆக அதிகரித்துள்ளது. மின்சார இணைப்பு உள்ள வீடுகளில் 88.0% குடும்பங்கள் 2015-16 இல் வாழ்ந்தன. இப்போது இந்த விகிதம் 96.8%ஆக அதிகரித்திருக்கிறது. இந்த நேரத்தில் ஒரு பழமொழியை கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது ரோமப் பேரரசு ஒரே நாளில் உருவாகி விடவில்லை என்பது தான் அது.

மோடி அரசு 8.8% வீடுகளுக்கு கூடுதலாக மின் இணைப்பு வழங்கியிருக்கிறது. சட்டப்பூர்வமான திருமண வயதுக்கு (18-21) ஆகியவற்றுக்கு முன்னால் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் மற்றும் ஆண்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. ஆனால் 18 வயதுக்கு முன்னதாக திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் எண்ணிக்கை, திருமணமான பெண்களில் 23.3% ஆக இருக்கிறது. இதில் இன்னும் முன்னேற்றம் தேவை.

இது மிகவும் நல்ல செய்தி இல்லை

இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் பத்தாண்டுகள் பள்ளிப் படிப்பை முடிக்காமல் இடையிலேயே தமது படிப்பை நிறுத்தி விடுகின்றனர். இதில் 59 சதவீதம் பெண்கள். 49. 8 சதவீதம் ஆண்கள். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் மக்களில் பாதிப்பேர் 21 வது நூற்றாண்டில் அதிக வருவாய் தரக்கூடிய வேலைகளுக்கோ, தொழில்களுக்கோ செல்ல முடியாமல், கல்வித் தகுதியில் பின்தங்கி உள்ளனர். நவீன தொழில்நுட்பங்களையும் தொழில் திறமைகளையும் கற்றுக்கொள்ள முடியாத நிலையில் இவர்கள் உள்ளனர். இந்திய மக்கள் தொகை பெரும்பாலும் இளைஞர்களையே கொண்டிருக்கிறது. 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மொத்த மக்கள் தொகையில் 26.5%. ஆனால், இந்த விகிதமும் குறைந்து வருகிறது. அதாவது, முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இளைய சமுதாயத்தின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கிடைக்கக்கூடிய ‘சமுதாய லாபம்’ இனி குறையும்.

பெண்களில் பெரும்பாலானவர்கள் இரத்த சோகை நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். 15 வயது முதல் 49 வயதுள்ள பெண்களில் 57% பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 15 வயது முதல் 19 வரை உள்ள இளம்பெண்களில் 59.1% பேர் இரத்த சோகையால் பாதிக்கப் பட்டிருப்பது கவலையளிக்கிறது. இவ்விரண்டு விகிதங்களும் தேசிய குடும்ப நல நாலாவது கணக்கெடுப்புக்குப் பிறகு அதிகரித்திருக்கிறது.

அடுத்த கசப்பான செய்தி, ஆறு மாதம் முதல் 23 மாதங்கள் வரையிலான குழந்தைகளில் 11.3% குழந்தைகள் மட்டுமே போதிய அளவுக்கு உணவு பெறுகின்றனர். இதன் காரணமாக ஐந்து வயதுக்கும் குறைந்த குழந்தைகளில் 35.5% குழந்தைகள் வயதுக்கேற்ற உயரம் இல்லாமல் குட்டையாக இருக்கின்றனர். 19.3% குழந்தைகள் வயதுக்கேற்ற எடையும் உயரமும் இல்லாமல் வளர்ச்சி குன்றியவர்களாக இருக்கின்றனர். 7.7% குழந்தைகள் வளர்ச்சி அதிக வளர்ச்சி குன்றியவர்களாக இருக்கின்றனர். சிசு மரணம் ஆயிரம் குழந்தைகளுக்கு 35.2% என்பதும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே இது 41.9% என்பதும் உலக சராசரியுடன் ஒப்பிட்டால் மிக மிக அதிகம்.

புள்ளிவிபரங்கள் எழுப்பும் கேள்விகள்

சில புள்ளி விவரங்கள் , விளக்கம் அளிப்பதற்கு பதில் கேள்விகளையே எழுப்புகின்றன. மேம்படுத்தப்பட்ட குடிநீர் ஆதாரங்களுடன் 95.9% மக்கள் வசிப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. மேம்படுத்தப்பட்ட குடிநீர் ஆதாரங்கள் என்பதைக் குழாய் மூலமான குடிநீர், பொதுக்குழாய், ஆழ்துளைக் கிணறு ஆகியவற்றின் மூலமான நீராதாரங்களையும் உள்ளடக்கியது என்கிறது அறிக்கையின் சாராம்சம்.

எனவே பாதுகாக்கப்பட்ட கிணறு, பாதுகாக்கப்பட்ட ஊற்று நீர், மழை நீர் ஆகியவற்றையும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கணக்கில் சேர்த்துத்தான் 95.9% என்ற கணக்குக்கு வந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. காலங்காலமாகக் குடிநீருக்கு பயன்படுத்தப்படும் திறந்தவெளி கிணறு, ஓடைகள், வழிந்தோடும் மழைநீர் ஆகியவற்றையும் சேர்த்திருக்கிறார்கள். இப்படித் புள்ளிவிபரங்களை 2024இல் அனைத்து பொதுமக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கி சாதனை படைத்துவிட்டதாக இவர்கள் அறிவிப்பார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.

மேம்படுத்தப்பட்ட சுகாதார கழிப்பறை வசதி பற்றிய புள்ளிவிவரம் இப்படியே கேள்விக்குறியாகி உள்ளது. குழாய் நீர் இணைப்புடன் கூடிய கழிப்பறை, நீரை ஊற்றிக் கழுவிடம் முறையில் அமைக்கப்பட்ட கழிப்பறை, கழிப்பறை நீரைத் தேக்கி வைக்கும் மிகப் பெரிய தொட்டியுடன் கூடிய கழிவறை என்றெல்லாம் இந்த புள்ளி விபரத்தில் சேர்த்திருக்கிறார்கள். கழிப்பறையில் கால் பதித்து உட்கார இடமும், அதிலிருந்து கழிவு வெளியேறுவதற்கான குழாய் இணைப்பும் இருந்தாலே அதைக் கழிப்பறையாக கருதி அவசரகோலமாக இந்த புள்ளிவிபரத்தை தயாரித்திருக்கிறார்கள். திறந்தவெளியில் மலம் கழிக்காமல் கண் மறைவாக மலம் கழித்தால் அது சுகாதாரமான கழிப்பறை வசதியாக கருதப் பட்டிருக்கிறது.

கிராமப்புறங்களிலும் ஏழைக் குடும்பங்களிலும் விறகு அடுப்புக்குப் பதிலாக சமையல் எரிவாயுவை பயன்படுத்த செய்யும் உஜ்வாலா திட்டம் தொடர்பாக அரசின் பிரச்சாரம் பெரிதாக இருந்தாலும் அத்தகைய குடும்பங்களில் 58.6% மட்டுமே சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் அது 43.8%. இந்த சதவீதம் கேஸ் இணைப்பு பெற்றுள்ள வீடுகளின் எண்ணிக்கையைத் தான் குறிக்கிறது. உண்மையில் அவர்கள் அனைவரும் சமையல் கேஸ் விலை உயர்வுக்குப் பிறகும் அதைத் தொடர்ந்து பயன்படுத்த முடிகிறதா என்பதைச் சொல்லவில்லை.

இப்படி வளர்ச்சி வீதமானது வெவ்வேறு விதமாக இருந்தாலும் கோடிக்கணக்கானவர்கள் இன்னும் ஏழையாகவும் பல கோடிக்கணக்கானவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழேயும் தான் வாழ்கின்றனர். ஏழ்மையை அறிய, உண்ணும் உணவை மட்டுமே குறியீடாகக் கொண்டு கணக்கிடுவோம். குடும்பங்களின் முதல் முன்னுரிமைச் செலவு உணவுக்காகத் தான். அப்படியிருக்க பெண்கள் பெரும்பாலானவர்கள் ஊட்டச்சத்து இல்லாமல் இரத்தசோகை உள்ளவர்களாகவும், கணிசமான குழந்தைகள் வயதுக்கேற்ற உயரம், உயரத்திற்கேற்ற எடை இல்லாமல் எடை குறைவாகவும் இருக்கிறார்கள் என்றால் உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக்கள் இல்லை என்பதே முக்கிய காரணம்.

உண்ணும் உணவு போதிய அளவு கிடைக்காமல் இருந்தாலும், அது சரியான தரத்தில் இல்லாமல் இருந்தாலும் அந்த குடும்பம் வறுமையில் வாடுவதாகவே கருதப் பட வேண்டும். அதாவது அதிக செல்வாக்கில்லாத குழந்தைகளை ஏழைகளின் குழந்தைகளாக கருதி இந்த அரசு மறந்து விட்டது என்பதே உண்மை.

தமிழில் த. வளவன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.