மாசுக்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் தேவை- அன்புமணி ராமதாஸ்

சென்னை:
பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
2019-ம் ஆண்டில் அனைத்து வகை மாசுக்களால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 லட்சம். இவர்களில் காற்று மாசுக்கு பலியானவர்கள் மட்டும் 17 லட்சம் பேர் என்று லான்செட் ஆணையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த புள்ளி விவரம் அதிர்ச்சி அளிக்கிறது.
உலக அளவில் மாசுக்களால் உயிரிழந்த 90 லட்சம் பேரில் 27 சதவீதம் இந்தியர்கள் என்பதிலிருந்தே இந்தியா எத்தகைய ஆபத்தில் உள்ளது என்பதை உணரலாம்.
தொழில் வளர்ச்சிக்காக மனித உயிர்களை இழப்ப தில் தவறில்லை என்ற எண்ணமே இந்த நிலைக்கு காரணம் ஆகும். இது மிகவும் ஆபத்தானது.
பொருளாதாரம் ஈட்டுவதற்காகத்தான் காற்றையும் சுற்றுச்சூழலையும் மாசு படுத்துகிறோம். ஆனால், மாசுக்களால் 2019ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார இழப்பின் மதிப்பு ரூ. 2.73 லட்சம் கோடி ஆகும். ஆக எதையும் பெறாமலேயே நிறைய இழக்கிறோம்.
காற்று மாசு, சுற்றுச்சூழல் மாசு பாதிப்பில் தமிழகமும் முன்னணியில் உள்ளது. எனவே, மக்களைக் காப்பாற்றுவதற்காக காற்று மாசு உள்ளிட்ட அனைத்து மாசுக்களையும் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.