திலீப்பின் நண்பர் கைதாகி ஜாமீனில் விடுதலை

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு அது வீடியோவாக எடுக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் உள்ளிட்ட 10 பேர் கைதாகினர். மூன்று மாத சிறைவாசத்துக்குப் பிறகு திலீப் ஜாமீனில் வெளிவந்தார். இந்த நிலையில் திலீப்பின் நண்பர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு எதிராகத் திரும்பி நடிகை கடத்தல் வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகளை திலீப் கொல்ல முயற்சித்தார் என்றும் பாதிக்கப்பட்ட நடிகை கடத்தப்பட்டபோது காரில் எடுக்கப்பட்ட வீடியோக்களை தனது மொபைலில் பார்த்தார் என்றும் போலீசில் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து திலீப் மீது மீண்டும் வழக்கு பதியப்பட்டு அந்த வழக்கில் கைதாவதில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் பெற்றார் திலீப். அப்படி புகார் கொடுத்த இயக்குனர் பாலச்சந்திர குமார் அதில், திலீப்பின் நண்பர் ஒருவர் அடிக்கடி திலீப்பின் வீட்டிற்கு வந்து சென்றதாகவும் அவருக்கும் இதில் தொடர்பு உண்டு என்று புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் குறிப்பிட்ட திலீப்பின் அந்த நண்பரான ஹோட்டல் அதிபர் சரத் ஜி நாயர் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். ஆனாலும் கைதான சில மணிநேரங்களில் அவர் ஜாமீனில் விடுதலையாகி கிளம்பி சென்றார். திலீப்பின் நண்பர் கைதான விவகாரம் மலையாள திரையுலகில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.