இங்கிலாந்தில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கத்தின் விகிதம் அதிகரிப்பு

லண்டன்,
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் காரணமாக சர்வதேச சந்தையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயர்ந்துள்ளன. இது உலக அளவில் பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது. இது இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 
கடந்த ஏப்ரல் 2022 நிலவரப்படி இங்கிலாந்தின் நுகர்வோர் விலை குறியீடு (CPI) 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் அந்நாட்டில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இங்கிலாந்தில் தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளதாக இங்கிலாந்தின் தேசிய புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
அங்கு கடந்த 12 மாதங்களில் மின்சார கட்டணங்கள் விலை உயர்வு 53.5% ஆகவும், எரிவாயு விலை 95.5% ஆகவும் உயர்ந்துள்ளது. மின்சாரம், எரிவாயு ஆகியவற்றின் விலை அதிகரிப்பால் கடந்த ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளதாக தேசிய புள்ளியியல் நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணர் கிராண்ட் பிட்ஸ்னர் தெரிவித்துள்ளார். 
இங்கிலாந்தில் உயர்ந்து வரும் இந்த பணவீக்கத்தின் காரணமாக குறைந்த வருமானத்தை உடைய குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.