மகள் ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு நீதிமன்றம் ஜாமீன்

புதுடெல்லி: பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமைப் பொறுப்பு வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜி. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் தனது முன்னாள் கணவர் மூலம் தனக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக 2015-ம் ஆண்டு மும்பை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

பீட்டர் முகர்ஜிக்கு அவரது முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை, ஷீனா முறை தவறி காதலித்ததால் இந்தக் கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் இந்திராணி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ்கன்னா, கார் டிரைவர் ஷியாம்வர்ராய் ஆகியோரும், பிறகு பீட்டர் முகர்ஜியும் கைது செய்யப்பட்டு, மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஜாமீன் கோரி இந்திராணி முகர்ஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பூஷண் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், இந்திராணி முகர்ஜிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று ஜாமீன் வழங்கினர்.

முன்னதாக, அவரது ஜாமீன் மனுவை எதிர்த்து சிபிஐ தரப்பில் “இந்திராணி முகர்ஜி தன் மகளைக் கொன்றவர், மகனைக் கொல்ல முயற்சி செய்தவர். எனவே, நீதிமன்றத்தின் எந்தக் கருணையையும் பெறத் தகுதியற்றவர். மேலும், இந்திராணி வெளியே வந்தால் சாட்சியங்களை அழித்து தலைமறைவாகக் கூடும்’ என்று வாதிடப்பட்டது

ஆனால், மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் “இந்திராணி முகர்ஜி சிறையில் ஆறரை ஆண்டுகளைக் கழித்துள்ளார். அதனால், அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.

தனது மகள் ஷீனா போரா உயிருடன் இருப்பதாகவும், தற்போது அவர் காஷ்மீரில் இருப்பதாகவும் இந்திராணி முகர்ஜி, கடந்த ஜனவரி மாதம் சிபிஐ இயக்குநருக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.