சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் காஷ்மீர் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை; மாஜி முதல்வர் உமர் அப்துல்லா தாக்கு

ஜம்மு: சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் காஷ்மீர் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். காஷ்மீரில் வசிக்கும் சிறுபான்மை சமூகமான இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் 2000ம் ஆண்டுகளின் தொடக்கத்திற்கு பிறகு கடுமையான பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளனர். 2000மாவது ஆண்டில் நடந்த இருவேறு தாக்குதல்களில் இந்த இரு சிறுபான்மையினர் சமூகங்களையும் சேர்ந்த சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர். சமீபத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் உள்பட 7 பேர் காஷ்மீரில் கொல்லப்பட்டனர். கடந்த சில தினங்களாக சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கியம் உள்ளிட்ட மதத்தினரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சி துணை தலைவருமான உமர் அப்துல்லா, ரஜோரி மாவட்டத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ நீக்கப்பட்ட பின் காஷ்மீர் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஒன்றன்பின் ஒன்றாக திட்டமிட்ட படுகொலைகள் நடைபெற்று வருகிறது. இந்த வாரத்தில் மட்டும் 3 படுகொலைகள் நடந்துள்ளது. சட்டப்பிரிவு 370 தொடர்பான விவகாரத்தில் எங்கள் கருத்துக்களை நீதிமன்றத்தில் எடுத்துரைப்போம். சட்டத்தை நாங்கள் எங்கள் கைகளில் எடுக்க மாட்டோம். நாங்கள் வேறொரு நாட்டின் மொழியை பேசுபவர்கள் அல்ல’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.