வங்காளதேச விடுதலைப்போர் 1971-ம் ஆண்டு நடந்தது. அப்போது, அப்துல் அஜிஸ் என்ற ஹாபுல், அவரது சகோதரர் முகமது அப்துல் மாட்டின், அப்துல் மன்னன் என்ற மோனாய் ஆகியோர் இந்தியாவில் உள்ள பர்புஞ்சிக்கு பயிற்சிக்காக வந்து, பயிற்சியை முடிக்காமல் அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு சென்று, சுதந்திர வங்காளதேசத்தை உருவாக்க முயன்ற கொரில்லாகளுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவத்தின் பக்கம் நின்று போரிட்ட ரசாக்கர் படையில் சேர்ந்தனர்.இவர்கள் அப்போது, கொலை. இனப்படுகொலை, கற்பழிப்பு, சித்ரவதை உள்ள குற்றங்களை வங்காளதேச விடுதலைப்போரின்போது, பர்லேகா பகுதியில் அரங்கேற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இவர்கள் 3 பேர் மீதும் டாக்காவில் உள்ள சர்வதேச குற்ற தீர்ப்பாயத்தில் போர்க்குற்ற வழக்கு தொடரப்பட்டது. 2014-ம் ஆண்டு விசாரணை தொடங்கியது. 2016-ம் ஆண்டு விசாரணை முடிந்தது. தீர்ப்பு இப்போதுதான் வந்துள்ளது.
தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி முகமது ஷாகினுர் இஸ்லாம் தலைமையிலான 3 உறுப்பினர் தீர்ப்பாயம், குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கருதி, அவர்களுக்கு மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
மூவரில் முகமது அப்துல் மாட்டின் தலைமறைவாக உள்ளார்.