40 முறை கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்ட 19 வயது இளைஞர்..! போதை மாத்திரை கும்பல் அட்டூழியம்

சென்னையில் போதை மாத்திரை வாங்கித்தருவதாக ஏமாற்றிய 19 வயது இளைஞரை, போதைக்கு அடிமையான இருவர் சேர்ந்து 40 முறை கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டை பழைய கிளாஸ் பேக்டரி சாலையில் 19 வயதுடைய இளைஞர் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலை ஓரத்தில் கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து ஆர்கே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது கொல்லப்பட்டவர் கொருக்குப்பேட்டை ஹரி நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ராகுல் என்பது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இந்த கொலை தொடர்பாக கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த கெளரிசங்கர், சரவணன், ரகுமான் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 15 தேதி அன்று 20,000 ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு போதை மாத்திரை வாங்கித் தருவதாக கூறிச்சென்ற ராகுல் தங்களை ஏமாற்றியதாகவும், அதற்கு பழிவாங்குவதற்காகவே கொடூரமாக கொலை செய்ததாகவும் கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சிசிடிவி கேமிரா காட்சிகளைப் பார்த்து போது ராகுலை வழிமறித்த இருவரில் ஒருவன் அவரை மடக்கிப்பிடித்துக் கொள்ள, மற்றொருவன் கத்தியை எடுத்து அவரை 40 இடங்களில் சரமாரியாக வெட்டும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த வழியாக சென்ற முதியவர் ஒருவர் இந்த கொலை சம்பவத்தை கண்டும் காணாதது போல கடந்து சென்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.

போதை வஸ்துக்களின் புழக்கத்தை கட்டுப்படுத்துவதோடு, போலீசார் ரோந்துப் பணியையும், புதிய இடங்களில் வாகன சோதனையையும் தீவிரப்படுத்தி போதைக் கும்பல் அட்டகாசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.