சிபிஐ ரெய்டு எதிரொலி: விருதுநகர் மாவட்டத்தில் 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து

விருதுநகர்: பட்டாசு ஆலைகளில் உச்சநீதிமன்ற அறிவித்துள்ள விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக சிபிஐ சோதனை நடத்திய நிலையில், 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், 406பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்கும் குறிப்பாணை வழங்கப்பட இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

காற்று மாசு தொடர்பான வழக்கில், பட்டாசு வெடிப்பதால் காற்றில் மாசு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் பட்டாசு உற்பத்தியாளர்கள் பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. ஆனால்,  உச்சநீதி மன்றம் அறிவிறுத்திய படி பட்டாசுகள் தயாரிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்த, பட்டாசு ஆலைகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேரடியாக சோதனை நடத்தி உண்மை நிலையை கண்டறிய வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து சிவகாசி, சாத்தூர் அருகே தாயில்பட்டி மற்றும் வெம்பக்கோட்டை பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் சுப்ரீம் கோர்ட்டு அறிவுரையின்படி பட்டாசு தயாரிக்கப்படுகிறதா? என சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த சில நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்.  பட்டாசு விற்பனை நிலையங்களில் பட்டாசுகளை பார்வையிட்டு பாதுகாப்பான பட்டாசுகளை தயாரிக்காத நிறுவனங்கள் முகவரிகளை தெரிந்து கொண்டு சம்மந்தப்பட்ட பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தினர்.  தொடர்ந்து, சாத்தூர் மற்றும் சிவகாசி பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு பேரியம் நைட்ரேட பயன்படுத்தாமல் பாதுகாப்பான முறையில் பசுமை பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா? அல்லது கோர்ட் உத்தரவை பின்பற்றாமல் பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்னர். இதைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக  விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  பேரியம் உப்பு கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரித்தல், சேமித்து வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் பட்டாசு உற்பத்தி ஆலைகளை தொடர் ஆய்வு செய்ய வருவாய்த்துறை, போலீஸ் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் இயங்கி வரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்படி ஆய்வுகளில் சிறிய அளவிலான விதிமீறல் கண்டறியப்பட்ட இடங்களில் தொடர்புடைய 406 பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்கும் குறிப்பாணை வழங்கப்படும். அதிக அளவிலான விதிமீறல்கள் கண்டறியப்பட்ட இடங்களில் தொடர்புடைய 174 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களிலும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை செயல்படுத்தும் விதமாக ஆய்வு குழுக்கள் மூலமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.