கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற லண்டன் சென்ற ராகுல் காந்தி

டில்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 23 ஆம் தேதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற லண்டன் சென்றுள்ளார்.

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில்  காங்கிரஸ் கட்சியின் 3 நாள் சிந்தனை  அமர்வு கூட்டம் நடந்தது.  அந்த கூட்டத்தில் கட்சியின் அமைப்பு, எதிர்கால  திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.  கூட்டத்தில் பங்கு பெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று லண்டன் சென்றுள்ளார்.   காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா இது குறித்து செய்தியாளர்களிடம் தகவல் அளித்தார்.

அப்போது அவர்,  ‘ராகுல் காந்தி வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் உரையாடுவதற்காக லண்டன் சென்றுள்ளார். அவர் வரும் 23ம் தேதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ‘75வது  ஆண்டில் இந்தியா – சவால்கள் – நவீன இந்தியா – முன்னோக்கிச் செல்லும் பாதை’  என்ற தலைப்பில் உரையை நிகழ்த்த உள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார்.

லண்டன்  சென்ற ராகுல்காந்தியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித் மற்றும் பிரியங்க் கார்கே ஆகியோர் சென்றுள்ளனர்.

லண்டனில் நடைபெற உள்ள மற்றொரு நிகழ்ச்சியில்  ராகுல் காந்தியுடன் எதிர்க்கட்சியை சேர்ந்த  ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ். தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி  தலைவர் கே.டி.ராமராவ், சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி,  திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோர்  பங்கேற்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.