புதுடெல்லி:
இந்திய தலைமை தேர்தல் ஆணையரும், தேர்தல் ஆணையரும், சிக்கன நடவடிக்கையாக தங்களுக்கு வழங்கப்படும் ஊக்கச் சலுகைக்கான வரி விலக்கு, சுற்றுலா பயணப் படி ஆகியவற்றை ஏற்க மறுத்துள்ளனர்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் கடந்த வாரம் பதவியேற்றார்.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் ஊக்கச்சலுகைகள், பயணப் படிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது சிக்கன நடவடிக்கைகளில் ஒன்றாக, தங்களுக்கு வழங்கப்படும் விருந்தினர் ஊக்கத்தொகைக்கு வரி விலக்கு தேவையில்லை என, ராஜிவ் குமார், தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஆகியோர் தெரிவித்தனர்.
மேலும், ஆண்டுக்கு 3 முறை வழங்கப்படும் குடும்பச் சுற்றுலா பயணப் படியை ஒருமுறை மட்டுமே வழங்கினால் போதும் எனவும் அவர்கள் கூறினர். அவர்களின் இந்த கோரிக்கைகள் மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்…வேலைக்கார பெண்ணை அடித்து துன்புறுத்திய டெல்லி தம்பதியினர்