லக்னோ: உ..பி.யில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆஸம் கான் (73). கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவுக்கு மிகவும் நெருக்கமானவர்.
சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு ராம்பூர் தொகுதியில் வெற்றிபெற்றார். நில அபகரிப்பு உட்பட பல்வேறு வழக்குகள் தொடர்பாக 2020 பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட ஆஸம் கான், 27 மாதங்களாக சீதாபூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே, உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவைத் தொடர்ந்து நேற்று காலை 8 மணியளவில் சீதாபூர் சிறையில் இருந்து ஆஸம்கான் விடுதலை செய்யப்பட்டார்.