சென்னை: தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வெப்பச் சலனம் காரணமாக 21-ம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், 22, 23-ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், 24-ம் தேதி உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
21-ம் தேதி (இன்று) மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, தமிழக கடலோரப் பகுதி மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
அதேபோல், வடக்கு கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள், அதை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.