புதுடெல்லி: கொரோனா வைரசைத் தொடர்ந்து தற்போது இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ‘மங்கிபாக்ஸ்’ எனப்படும் குரங்கம்மை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இங்கிலாந்தில் குரங்கம்மை பாதித்தோர் எண்ணிக்கை 20 ஆக நேற்று அதிகரித்தது. இந்த வைரஸ் பாதித்தவர்களுக்கு சின்னம்மை, பெரியம்மைவிட அளவில் பெரிய கொப்பளங்கள் உடல் முழுவதும் நூற்றுக்கணக்கில் ஏற்படும். இந்நிலையில், இந்தியாவில் இந்த வைரஸ் பரவுவதை தடுக்க ஒன்றிய சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘‘நாடு முழுவதும் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. குரங்கம்மை பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வருபவர்களிடம் வைரஸ் அறிகுறி தென்பட்டால், உடனடியாக மாதிரிகளை எடுத்து தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அரசும் உன்னிப்பாக கவனிக்கிறது’’ என்றனர்.