கியான்வாபி மசூதி வழக்கை முன்வைத்து சிவலிங்கம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூகவலைதளத்தில் வெளியிட்டதாகக் கூறி டெல்லி இந்து கல்லூரியின் பேராரிசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான இந்து கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியராக உள்ளார் ரத்தன் லால். இவர் வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.
அண்மையில் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் குறித்து இவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
ஆனால், அந்தக் கருத்து மதத்தின் அடிப்படையில் இருவேறு குழுக்களுக்கு இடையே விரோதத்தை ஊக்குவிக்கும் வகையில் இருந்ததாகக் கூறி இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 153A, 295A ஆகியனவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் அவரை கைது செய்தனர். அவர் மீது எஃப்ஐஆரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. லால் மீது, டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிந்தால் புகார் கொடுத்திருந்தார். அவர் அந்தப் புகாரில் ரத்தன் லால் ட்விட்டரில் சிவலிங்கம் குறித்து தவறாக சித்தரித்திருந்ததாகக் கூறினார். அந்தப் புகாரின் அடிப்படையிலேயே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, அவரது போஸ்ட் வைரலான நிலையில், எனக்கு நிறைய ஆன்லைன் மிரட்டல்கள் வருகின்றன என்று டாக்டர்.ரத்தன் லால் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து ஊடகங்களில் அவர், “நான் எனது பதிவுக்காக இத்தகைய மிரட்டல்களும், வசவுகளும் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. பூலே, ரவிதாஸ், அம்பேத்கர் எனப் பலரும் இந்து மதத்தின் மீது விமர்சனங்களை வைத்துள்ளனர். நான், எனது பதிவில் விமர்சனம் கூட செய்யவில்லை. ஒரு பார்வையைத் தான் பதிவிட்டிருந்தேன். நம் நாட்டில் மட்டும்தான் எதெற்கெடுத்தாலும் மக்களின் மத உணர்வு புண்பட்டுவிடுகிறது. அப்படியென்றால் என்ன செய்வது? வாயில் பேண்டேஜ் தான் போட்டுக் கொள்ள வேண்டும் போல?” என்று பேசியிருந்தார்.
கியான்வாபி மசூதி ஆய்வரிக்கையில், மசூதியின் அடித்தள சுவர்களில் இந்து கோயில்களின் பல சின்னங்கள் கிடைத்துள்ளன. இதில், தாமரை, ஸ்வஸ்திக், மேளம், திரிசூலம், பிளிரும் துதிக்கையுடன் யானை முகங்கள் மற்றும் மணிகள் என பல இடங்களில் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை, மசூதியின் 3 கோபுரங்களின் தூண்களிலும் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இங்கு சம்ஸ்கிருதம் கலந்த பழங்கால இந்தி வாசகங்களும் 7 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.