முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவு இடத்தில் சோனியா காந்தி,
ராகுல் காந்தி
, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மேலும், ராஜீவ் காந்தியின் நினைவு தினம் நாடு முழுவதும்
காங்கிரஸ்
கட்சியினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மன்னிப்பு மற்றும் இரக்க குணத்தை எங்களுக்குள் விதைத்தவர் எங்களது தந்தை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “தொலை நோக்கு பார்வை நிறைந்த எனது தந்தை நவீன இந்தியாவை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தார். அவர் இரக்கமும் கனிவும் மிக்க மனிதராக இருந்ததுடன் எனக்கும் பிரியங்காவிற்கும் மிக சிறந்த தந்தையாகவும் இருந்தார். மன்னிப்பு மற்றும் இரக்க குணத்தை எங்களுக்குள் விதைத்தார். அவர் இல்லாதது மிகவும் துயரமானது. அவருடன் நாங்கள் வாழ்ந்த காலங்களை அன்புடன் நினைவு கூறுகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர்
ராஜீவ் காந்தி
கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த
பேரறிவாளன்
, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
Anbumani Ramadoss அன்புமணிக்கு முடிசூட தயாரான ராமதாஸ்: பாமகவில் நடக்கும் அதிரடி மாற்றம்!
ஆனால், காங்கிரஸ் கட்சியினர் மட்டும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை வாயில் வெள்ளை துணி கட்டி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள எழுவரை விடுதலை செய்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை என்று ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மன்னிப்பு மற்றும் இரக்க குணத்தை எங்களுக்குள் விதைத்தவர் எங்களது தந்தை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.