சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் குரூப் 2 தேர்வை 11 லட்சம் பேர் எழுதி வருகின்றனர்.
தமிழகத்தில் குரூப் 2, குரூப் 2 ஏ பதவிகளில் காலியாக உள்ள 5,000 பதவியிடங்களுக்கான தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தேர்வர்கள் காலை 8.30 மணிக்கே தேர்வு மையத்திற்கு வருகை புரிந்தனர். 9 மணிக்கு பிறகு தேர்வு அறைக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.
9.30 மணிக்கு தேர்வு தொடங்கிய 12.30 மணிக்கு நிறைவு பெறுகிறது. ஆனால் 12.45 மணி வரை தேர்வர்கள் தேர்வு அறையில்தான் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 11 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதி வருகின்றனர். இதில் ஆண்கள் 4.96 லட்சம் பேர். பெண்கள் 6.81 லட்சம் பேர். திருநங்கைகள் 48 பேர். மாற்றுத்திறனாளிகள் 14,000 பேர். பொது ஆங்கிலம் பிரிவில் 2.31 லட்சம் பேரும், பொதுத் தமிழ் பிரிவில் 9.46 லட்சம் பேரும் தேர்வு எழுதி வருகின்றனர்.
38 மாவட்டங்களில் 117 மையங்கள் தேர்வு நடைபெற்ற வருகிறது. 4012 தலைமை கண்காணிப்பாளர்கள், 58,900 தேர்வு கூட கண்காணிப்பாளர்கள், 993 நடமாடும் குழுக்கள், 323 பறக்கும் படைகள், 6400 கண்காணிப்பு குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் 7 மையங்களில் 1.15 லட்சம் பேர் தேர்வு எழுதி வருகின்றனர். அடுத்த படியாக மதுரையில் 64 ஆயிரம் பேர், சேலத்தில் 63 ஆயிரம், திருச்சியில் 50 ஆயிரம், கோவையில் 48 ஆயிரம் பேர் தேர்வு எழுதி வருகின்றனர். ஜூன் மாதம் இறுதியில் குரூப் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படு என்று எதிர்பார்க்கப்படுகிறது.